ஷா ஆலம், பிப்.4-
ஜோஹான் செத்தியா திறந்த வெளி எரிப்பு நடவடிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு செயற்குழு இந்த விவகாரத்திற்கு மூன்று மாதங்களில் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையில் கோடைக் காலத்திற்குள் சம்பந்தப்பட்ட விவகாரத்திற்கு தீர்வு காண்பது அவசியம் என்று சுற்றுச் சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் தெரிவித்தார்.
இதனிடையே, 2,000 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விவசாய நிலத்திற்கு ஏற்ப கட்டடங்கள் இருப்பதை அனைத்து உரிமையாளர்களும் உறுதி செய்ய வேண்டியது குறித்து அச்செயற்குழு சந்திப்புக் கூட்டம் நடத்தும் என்றார் அவர்.
“இவ்விகாரத்திற்கு தீர்வு காண அனைத்து நில உரிமையாளர்களையும் செயற்குழு அழைக்கவிருக்கிறது. சில உரிமையாளர்கள் கிளந்தான், பினாங்கு போன்ற வெளி மாநிலங்களில் உள்ளனர். அவர்கள் ஆண்டுதோறு நில வரி செலுத்தி வருகின்றனர்” என்று அவர் சொன்னார்.
“அதே வேளையில், இந்நிலங்களை மாநில அரசு கையகப் படுத்திக் கொண்டு நவீன விவசாயம் அல்லது வீடுகள் உட்பட வர்த்தக கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என்றதொரு பரிந்துரையும் உள்ளது” என்று செயற்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹீ கூறினார்.