ஷா ஆலம், பிப்.5-
இம்மாநிலத்திற்கு வருமை புரியும் சுற்றுப் பயணிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ற சுற்றுலாத் திட்டங்களை எளிதாகத் தேர்வு செய்வதற்கு சிலாங்கூர் சுற்றுலா துறை “ஜோம்சேவ்” எனும் செயலியை மேம்படுத்தியுள்ளது. 2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு மற்றும் 2021 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டு ஆகிய கால கட்டத்தில் அதிகமான சுற்றுப் பயணிகளைக் கவர்வதற்காக இச்செயலியை ஜே எஸ் இ-கொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதன்
தலைமை நிர்வாகி அஸ்ருல் ஷா முகமது கூறினார்.
‘ஜோம்சேவ்’ எனும் இலவச செயலியானது தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் பேரங்காடிகள் போன்றவை குறித்த சிறப்பு சலுகைகள், கவர்ச்சிகரமான ஊக்குவிப்புகள், பற்றுச்சீட்டுகளை ரொக்கமாக்குவது போன்ற சேவைகளை சுற்றுப் பயணிகள் அநுபவிக்கலாம் என்றார் அவர்.
தங்கள் வர்த்தக தலங்களுக்கு வருகை அளிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த இச்செயலியைப் பதிவிறக்கும் செய்யும்படி சுற்றுலாத் தொழில்துறையினர் கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
கடந்தாண்டில் மொத்தம் 7.7 மில்லியன் சுற்றுப் பயணிகள் மாநிலத்திற்கு வருகை புரிந்த வேளையில், இவ்வாண்டு அவ்வெண்ணிக்கை 8 மில்லியனை எட்டும் என்று மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.