ஷா ஆலாம், மார்ச் 2-
இம்மாநில தலைவர்கள் மற்றும் கெஅடிலான் உறுப்பினர்களிடையிலான ஐக்கியமே சிலாங்கூர் இன்னும் வலிமையாக இருப்பதற்குக் காரணம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மத்திய அரசாங்க ரீதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு மத்தியில் இம்மாநிலம் தொடர்ந்து வலுவாக உள்ளது என்றார் சிலாங்கூர் கெஅடிலான் தலைவருமான அமிருடின்.
“பல்வேறு சோதனைகள் வந்தாலும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியிருக்கும் இதர மாநிலங்கள் போல் அல்லாது சிலாங்கூர் நிலைத்தன்மையுடன் உள்ளது” என்றார் மந்திரி பெசார்.
“சிலாங்கூரில் எங்களுக்கு நிலையான பெரும்பான்மை உள்ளது. அதோடு, கெஅடிலான் அதிகமான சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது” என்று இங்கு சிலாங்கூர் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.