ஷா ஆலாம், மார்ச் 2-
சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய அதிகாரத்திற்கு ஏற்ப அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பொருட்டு, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் அனைத்து தரப்பினரும் தனக்கு ஒன்றிணைந்து உதவும்படி மாநில மந்திரி பெசாரும் சிலாங்கூர் கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
“அனைவரும் நடந்ததை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். காரணம், மக்களுக்காக நாம் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது” என்றார் அமிருடின்.
“சுய மேம்பாட்டிற்காக இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் மற்றவரைக் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று சிலாங்கூர் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.