செலாயாங், மார்ச் 3-
செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) கோம்பாக் எம்ஆர்ஆர்2 சாலை அருகே உள்ள எண்ணெய் நிலையம் முன்புறம் உரிமம் இன்றி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பொருட்களை கடந்த வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. இவர்களின் செயலால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சாலை பயனீட்டாளர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் தோற்றத்திற்கும் இது களங்கத்தை ஏற்படுத்துகிறது என்று எம்பிஎஸ் தொழில் கழக பிரிவு இயக்குநர் முகமது ஜின் மாசோட் கூறினார்.
“அமலாக்க பிரிவு அதிகாரிகள் மூன்று கூடாரங்கள், இரண்டு மடக்கும் மேசைகள், இரண்டு பலகை மேசைகள், ஒரு நாற்காலி மற்றும் இதர பொருட்களை மூன்று வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்தனர்” என்று அறிக்கை ஒன்றின் வழி முகமது ஜின் விவரித்தார். 1974 ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டட சட்டம் மற்றும் உரிமம் இன்றி வியாபாரம் செய்ததன் பேரில் 2007 சிறு வியாபாரிகள் சட்டம் பிரிவு 3இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.