ஷா ஆலம், மார்ச் 9-
இம்மாநிலத்தில் வெள்ளப் பிரச்னை தீர்க்கப்பட்டதன் வழி சொத்துடமை மற்றும் சுற்றுலா துறைக்கு ஆக்கப்பூர்வ பலன்கள் கிடைத்துள்ளன. இவை மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் உந்துதலாக அமைந்திருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டில் தயாரான ஷா ஆலாம், டிடிடிஐ ஜெயா வெள்ளத் தடுப்புத் திட்டம் லட்சக்கணக்கான வெள்ளியை எட்டும் அளவுக்கு சொத்துடமையை மேம்படுத்திய முன்னுதாரண கட்டடம் ஆகும் என்று இங்கு ஜூப்ளி பேராக் மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கான கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் மந்திரி பெசார் குறிப்பிட்டார்.
“ஆறுகள் சுற்றுப் பயணிகளை அதிகம் கவரும் என்பதால் அவற்றைச் சுற்றிலும் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாப்பது முக்கியம். ஆறுகளின் இயற்கைத் தன்மையைப் பேணிக் காப்பது இன்றியமையாதது” என்றார் அமிருடின்.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் முறையைப் பயன்படுத்தி ஆற்றோரங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை வடிகால் மற்றும் நீர்பாசன துறை மேற்கொள்வது அவசியம் என்றார் மந்திரி பெசார்.