ஷா ஆலம், மார்ச் 11-
கோல லங்காட் தென் பகுதியில் உள்ள பராமரிக்கப்பட்ட காட்டில் கடந்த 2 வாரங்களாக பற்றி எரிந்த தீ நேற்றிரவு முழுமையாக அணைக்கப்பட்டது.
52 ஹெக்டர் சுற்றளவிலான அக்காட்டுப் பகுதியில் தீச்சம்பவங்கள் ஏதும் இல்லை என்று நேற்று மாலை 6.30 மணியளவில் உறுதி செய்யப்பட்டதாக சிலாங்கூர் மீட்பு மற்றும் தீயணைப்புப் படை (போம்பா) நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் ஹாஃபிஷாம் முகமது நோர் கூறினார்.
“சம்பந்தப்பட்ட காட்டு பகுதியில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. ஆயினும், அப்பகுதியில் புகை வெளிவருகிறதா என்பது குறித்து அறிய கண்காணிப்பு நடவடிக்கை மேலும் ஒரு நாள் தொடரப்படும்” என்றார் அவர்.
நேற்று நடைபெற்ற தீயணைப்பு நடவடிக்கையின் போது நேரடியாகத் தாக்கும் முறை மற்றும் ஜெட் ஷூட்டர் முறையும் பயன்படுத்தப்பட்டு வெளியேறிக் கொண்டிருந்த எஞ்சிய புகை முற்றிலும் மறைந்தது உறுதி செய்யப்பட்டது என்று ஹாஃபிஷாம் விவரித்தார்.