அம்பாங், மார்ச் 20:
கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க நடமாட்ட கட்டுப்பாட்டை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து காய்கறி வகைகள், மீன் மற்றும் கோழி போன்ற பொருட்களுக்கு அதிக தேவை ஏற்பட்டதால், அவற்றின் விலைகள் 10 முதல் 30 விழுக்காடு அதிகரித்துள்ளன. இங்குள்ள மொத்த சந்தை மற்றும் பேரங்காடிகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்ட கட்டுப்பாடு நேற்று அமலுக்கு வந்த பின்னர், சம்பந்தப்பட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்ததை காண முடிந்தது,
காய்கறி மற்றும் கோழி போன்றவற்றின் விலைகள் கிலோ ஒன்றுக்கு 1 ரிங்கிட் முதல் 2 ரிங்கிட் வரை அதிகரித்தன. அதே வேளையில், ஒரு கிலோ கெம்போங் மீன் விலை 14 ரிங்கிட்டில் இருந்து 20 ரிங்கிட்டாக விலையேற்றம் கண்டது. பதற்றம் காரணமாக மக்கள் பொருட்களை வாஙக அலை மோதுவதைக் கண்டு மொத்த வியாபாரிகளும் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர் என்று இங்குள்ள எம்பிஏஜே சந்தையில் பொருட்களை வாங்கிய கைருல் என்பவர் தெரிவித்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் கிலோ ஒன்று 5 ரிங்கிட் என்ற விலையில் விற்கப்பட்ட தக்காளி இன்று 7 ரிங்கிட் விலைக்கு விற்கப்படுகிறது என்றார்.