செலாயாங், மார்ச் 20:
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைப் பின் பற்றத் தவறிய செலாயாங் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு செலாயாங் நகராண்மைக் கழகம் ( எம்பிஎஸ்) 20 எச்சரிக்கை அறிக்கைகளை வழங்கியது.
எம்பிஎஸ் மேற்கொண்ட கண்ணோட்டத்தின் போது மோட்டார் சைக்கிள் பழுது பட்டறை, கார் கழுவும் கடை, டயர் கடை மற்றும் சில்லரை பொருட்கள் விற்கும் வர்த்தகர்கள் சிலர் வர்த்தக நடவடிக்கையில் வழக்கம் போல் ஈடுபட்டதைத் தொடர்ந்தது கண்டறியப்பட்டது என்று அதன் நிறுவன தொடர்பு பிரிவி இயக்குநர் முகமது ஜின் மாசோட் கூறினார்.
“சம்பந்தப்பட்டவர்களுக்கு ஈராண்டுக்கு மேல் போகாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1988ஆம் ஆண்டு தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் 24 இன் கீழ் எச்சரிக்கை அறிக்கை வழங்கப்பட்டது” என்றார் அவர். சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கையானது கோவிட்-19 பரவலைத் தடுக்க அரசாங்கம் அறிவித்த நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை அவமதிப்பது போல் இருப்பதாக அவர் சொன்னார்.
முன்னதாக, நேற்று முந்தினம் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் கோவிட்-19 பரவலைத் தடுக்க மார்ச் 18 தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரையில் நடமாட்ட கட்டுபாடு உத்தரவைப் பிறப்பித்தார்.