ஷா ஆலம், ஏப்.21-
சேவை துறையின் வாயிலாக 2019ஆம் ஆண்டில் மொத்தம் 47.8 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை பதிவு செய்து நாட்டில் அதிக முதலீட்டை பதி செய்த மாநிலங்களில் சிலாங்கூர் முன்னணி வகிக்கிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (மீடா) நேற்று செய்த அறிவிப்பில் உற்பத்தி துறையிலும் சிலாங்கூர் ரிம.17 பில்லியன் பதிவு செய்து நாட்டில் முன்னணி வகிப்பதாகத் தெரிவித்தது என்றார் அவர்.
2018ஆம் ஆண்டிலும் சிலாங்கூர் முன்னணி வகித்துள்ளதோடு கடந்த 25 ஆண்டுகளாக சிலாங்கூர் தொடர்ந்து முன்னணி வகித்து வந்துள்ளது என்ற தகவலையும் அமிருடின் வெளியிட்டார். கடந்த 2019ஆம் ஆண்டில் அவ்விரண்டு துறைகளில் அதிக முதலீட்டை பெற்ற மாநிலமாக விளங்கும் வேளையில், ஒட்டு மொத்தத்தில் அதிக முதலீடுகளைப் பெற்ற மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது என்றார் அவர்.
கடந்தாண்டு அமெரிக்காவிற்கு சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் மூண்ட போதிலும் நாட்டின் முதலீட்டு தேர்வுக்கான மாநிலமாக சிலாங்கூர் நீடித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.