புத்ராஜெயா, ஏப்ரல் 22:
உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களை வீடு திருப்பி அனுப்பும் போது சரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா ஆலோசனை தெரிவித்தார். முறையான கால அட்டவணை மற்றும் வியூகங்களை அமல்படுத்த வேண்டும் என நினைவு படுத்தினார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் நான்கு வாரங்களாக அடைப்பட்டிருந்த உயர்கல்வி மாணவர்கள் யாரும் இதுவரை கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்படவில்லை என்றார்.
” நாம் தொடர்ந்து பரிசோதனை செய்யலாம், மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பலாம். எனினும், அவசர அவசரமாக ஊர்களுக்கு திரும்பும் முடிவுகள் எடுத்து, முந்தைய தவறை மீண்டும் செய்ய வேண்டாம். ஊர்களுக்கு திரும்பும் நடவடிக்கை மிகவும் துல்லியமாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒத்துழைப்போடு நடத்தப்பட வேண்டும்,” என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நேற்றைய செய்தியாளர்களிடம் சந்திப்பில் இவ்வாறு நூர் ஹிஸாம் விளக்கினார்.
இதற்கு முன், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு பிரிவு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தமது செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் பல்கலைக் கழகத்தில் அடைப்பட்டு இருக்கும் மாணவர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படலாம் என்றும், இருந்தாலும் சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.