புத்ராஜெயா, ஏப்ரல் 26:
மத்திய அரசாங்கம் கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் துவண்டு போயுள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம் நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
” இதற்கு பிறகு, உலகத்தில் பொருளாதார மூலதனம் பற்றாக்குறை ஏற்படும், புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது.நாம் முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யவில்லை என்றால் நாம் பின்தங்கிய நிலையில் இருக்க வேண்டியது தான். தொழில் நுட்ப அடிப்படையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாம் புதிய கோணத்தில் யுக்திகளை கையாள வேண்டும்,” என்று ஆர்டிஎம் மற்றும் ஆஸ்ட்ரோ அவானி இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய போது இவ்வாறு பிரதமர் இவ்வாறு பேசினார்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் தற்போதைய சவாலை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் இந்த நேரலையில் கூறினார்.
” கோவிட்-19 தொற்று நோய் தாக்கம் மலேசியாவில் இறங்குமுகமாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது என அமைச்சரவையில் நினைவு படுத்தினேன். ஆனாலும், நமது அண்டை நாடுகளில் இந்த நோய் தலைவிரித்தாடுகிறது. நாம் கூடிய விரைவில் இதில் இருந்து மீள வேண்டும். மற்றவர்கள் நம்மை பின்தள்ளி விடக்கூடாது. நாம் தவறான வியூகத்தை வகுத்து, கோவிட்-19 தாக்குதலில் நாம் பின்னடைவு அடைந்து விடக்கூடாது. நமது முயற்சிகள் வீணாகி, இலக்கை எட்ட முடியாமல் போய்விடும. ஆகவே, இவை அனைத்தும் நாம் கலந்து ஆலோசித்து வருகிறோம்,” என்று முஹீடின் யாசீன் கூறினார்.
“அரசாங்கம் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பிறப்பித்துள்ள முடிவு மிகவும் கடினமான ஒன்றாக இருப்பினும் கோவிட்-19 நோய் பரவலை தடுக்க வேறு வழியில்லாத காரணமே. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும், குறிப்பாக ஒரு நாளைக்கு பொருளாதார ரீதியில் ரிம 2.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பிகேபி நடவடிக்கை ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்று நீங்களே கணக்கிட்டு பாருங்கள்,” என்று பிரதமர் நேரலையில் நாட்டு நடப்பு தொடர்பில் மக்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.