ஷா ஆலம், மே 2:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் எல்லா தொழில் துறைகளும் செயல்படுவதற்கு அனுமதிக்கும் முன்னர் ஊராட்சி மன்றங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவது மற்றும் அமலாக்க வழிமுறைகளையும் பற்றி கலந்தாய்வு செய்ய வேண்டும் என்று ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.
” நாம் பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டியுள்ளது. ஊராட்சி மன்றங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவகங்களின் செயல்பாடுகளை நாம் ஆராய வேண்டும். அப்போது தான் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் போது சரியான முறையில் செயல்பட முடியும். இதில் சட்ட விரோத கேளிக்கை மையங்கள் மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகள் அடங்கவில்லை. ஷா ஆலம் ஏரிப் பூங்கா திறக்கப்பட்டால் எவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று தெரியவில்லை. என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம்? இவை அனைத்தும் நாம் கலந்து ஆலோசித்து வருகிறோம். இது ஒரு நாளில் செய்ய முடியாது,” என பெட்டாலிங் ஜெயாவில் சிலாங்கூர் ரமலான் இ-பஸாரை பார்வையிட வந்த போது இவ்வாறு அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.