ஷா ஆலம், மே 27:
சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டு மகளிர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை மாநில மந்திரி பெசார் கடுமையாக கண்டித்தார். பண்டார் உத்தாமா சட்ட மன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் மற்றும் கம்போங் துங்குவின் சட்ட மன்ற உறுப்பினர் லிம் யீ வீ ஆகியோருக்கு கிடைத்த பாலியல் தொல்லை கடுமையான மற்றும் பொறுப்பற்ற செயலாகும் என டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
” இந்த இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்களும் சிலாங்கூர் மாநிலம் மற்றும் மகளிர் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் இளம் பெண்கள் ஆவார்கள். குற்றவாளிகளுக்கு நியாயமான முறையிலும் மற்றும் தகுந்த தண்டனையும் வழங்க வேண்டும் என்று நம்புகிறேன். காாவல்துறை அதிகாரிகள் விசாரித்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் இன்று இரவு டிவிட்டர் மூலம் தெரிவித்தார்.
” சிலாங்கூர் மாநிலம் மகளிரை கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கௌரவமான அந்தஸ்தை வழங்கும் ஒரு மாநிலமாகும். அதே நேரத்தில் மகளிரின் பாதுகாப்பு குறித்து எப்போதும் அக்கறை கொண்டுள்ள மாநிலம் . இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனால் மக்கள் தங்கள் கருத்துக்களை சமூகத்தில் தெரிவிக்க வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணருவார்கள்” என்று அவர் கூறினார்.
இன்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் நிக் எசானி மொஹட் பைசல் மே 22 அன்று ஜமாலியாவிடம் ஒரு புகாரை பெற்றதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு பிரிவு 507, தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இதே துன்புறுத்தலைப் பெற்றதாகக் கூறும் யி வீ காவல்துறையிடம் புகார் செய்யவில்லை என அவர் கூறினார். பாலியல் ரீதியான அறிக்கையை பதிவேற்றிய பேஸ்புக் கணக்கு உரிமையாளரிடமிருந்து அவர்கள் அச்சுறுத்தலைப் பெற்றனர். முன்னதாக மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த செயலைக் கண்டித்து, உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.