ஷா ஆலம், மே 29:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மத்திய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவை சந்தித்து கோவிட்-19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பேசினார். டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் போர்ஹான் அமான் ஷா, இருவரின் சந்திப்பு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அதிகாரப் பூர்வ இல்லத்தில் நடைபெற்றது என தெரிவித்தார். இந்த அதிகாரப் பூர்வ சந்திப்பில் மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாமுட், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாநில சுகாதார இலாகாவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” சிலாங்கூர் மாநில அரசாங்கம் கோவிட்-19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்திற்கு பிறகு புதிய மாற்றங்கள் தொடர்பான விவாதங்கள் இதில் இடம் பெற்றது. மாநில அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து பணியாற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது,” என்று ஊடக அறிக்கையில் போர்ஹான் அமான் ஷா கூறினார்.