புத்ராஜெயா, மே 29:
நேற்றோடு ஒரு வாரம் கோவிட்-19 நோய் சம்பவங்களால் நம் நாட்டில் எந்த ஒரு மரணமும் ஏற்படவில்லை என்றும் இந்த நோயால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதிய சம்பவங்களை விட ஒன்பது மடங்காக இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்க அமல்படுத்திய நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) ஆகிய இரண்டு காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொற்று நோய் சம்பவங்களில் நேற்றுதான் மிகவும் குறைவாக ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றியை அளிக்கத் தொடங்கியுள்ளதை காட்டுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
” கோவிட்-19 தொற்று நோய் மலேசியர்களிடையே குறைந்த நிலையில் உள்ளது நல்ல முன்னேற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இதில் முன் வரிசை பணியாளர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது எனவும் நேரம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களது சேவையை அனைத்து மலேசியர்களும் தலை வணங்க வேண்டும். இது மட்டுமின்றி, அரசாங்கம் செயல்படுத்திய சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றிய பொறுப்புள்ள அனைத்து பொது மக்களுக்கும் பாராட்டுக்கள்,” என்று நூர் ஹிஸாம் கூறினார்.