பூச்சோங், ஜூன் 16:
சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று தொடங்கி பல கட்டங்களாக 417 காலைச் சந்தைகள், இரவுச் சந்தைகள் மற்றும் பாஸாரியா ஆகியவை செயல்படத் தொடங்கியது என ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். ஊராட்சி மன்றங்கள் விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கைகள் நடக்க வேண்டும் என்றும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைத்து சீரான செயலாக்க நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் நினைவு படுத்தினார்.
” வணிகர்கள் கடந்த மூன்று மாதங்களாக வருமானம் இல்லாமல் படும் இன்னல்களை மாநில அரசாங்கம் புரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாம் கட்டம் கட்டமாக திறக்க முடிவு எடுத்தோம். ஊராட்சி மன்றங்கள் வணிகச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. எல்லா சந்தை நடக்கும் இடங்களையும் பார்வையிட கால அவகாசம் வேண்டும்,” என்று சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் காலைச் சந்தை பகுதியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு ஸீ ஹான் கூறினார்.