ஷா ஆலம்,ஜூலை 17:
கடந்த 1990 முதல் ரிம 34 மில்லியனுக்கும் அதிகமான கடன்களை யாயாசான் சிலாங்கூர் கொண்டிருப்பதற்கு அதன் முந்தைய நிர்வாக அமைப்புகளும் அதன் நடைமுறைகளுமே காரணம் என மந்திரி பெசார் டத்தோ அமிரூடின் ஷஹாரி சுட்டிக்காண்பித்தார். கல்வி கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதாலும்,சொத்துக்களை வாடகைக்கு எடுப்பதாலும் இந்த அறக்கட்டளையின் செயல்பாட்டை வெகுவாக பாதித்திருக்கு காரணத்தினால் அதன் கடன் நிலையும் தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்,யாயாசான் சிலாங்கூரின் நிர்வாகம் மற்றும் நிர்வாக செலவினங்கள் வருடத்திற்கு வெ.2.9 மில்லியனை எட்டும் நிலையில் அதன் மொத்த வாடகை வருவாயோ வெ.123,000ம் மட்டுமே எனவும் கூறினார். இதனால்,இனியும் தொடர்ந்து மாநில அரசாங்கம் இழப்பைச் சுமக்க முடியாது.எனவே,லாபத்தை கொண்டு வராத சொத்துக்களை மறுசீரமைப்பு நடவடிக்கையின் அடிப்படையில் விற்கப்பட வேண்டும் என மாநில சட்டமன்றத்தில் யாயாசான் சிலாங்கூர் சொத்துக்கள் விற்கப்படுவது குறித்து எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோ மந்திரி பெசார் இவ்வாறு விளக்கம் அளித்தார்.
கம்புங் பாரு, அம்பாங் பாயிண்ட் மற்றும் புக்கிட் பிந்தாங் ஆகிய இடங்களில் யாயாசான் சிலாங்கூருக்கு சொந்தமான சொத்துக்களை சரிசெய்வதைத் தவிர, மாநில அரசு அதிக பயன்பாடு மற்றும் இலாபகரமான சொத்துக்கள் மூலம் மேம்பாடுகளையும் செய்து வருவதாக மேலும் கூறினார். தொடர்ந்து கூறுகையில்,மாநில மந்திரி பெசார் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருக்கும் யாயாசான் சிலாங்கூரின் தலைமையகத்தை சிலாங்கூர் மாநில தலைநகரான ஷா ஆலமிற்கு மாற்றுவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவையில் தெரிவித்தார்.