ஷா ஆலம், அக் 5- நீர் விநியோகத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் பொது இடங்களில் உள்ள குழாய்களிலிருந்து நீரை பெறலாம் என்று ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக நிறுவனத்தின் வர்த்தக தொடர்பபு பிரிவுத் தலைவர் எலினா பாஸ்ரி கூறினார். லோரி வாயிலாக மேற்கொள்ளப்படும் நீர் விநியோக சேவை மருத்துவமனை, டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையமாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பொது மக்கள் ஓரிட சேவை மையத்தின் வாயிலாகவும் குடிநீர் விநியோகம் தொடர்பான தகவல்களை பெறலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார். கடந்த 14 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட 274 இடங்களுக்கு தேவையான 60 கோடியே 20 லட்சம் லிட்டர் நீரை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தினால் விநியோகம் செய்ய இயலவில்லை எனக் கூறிய அவர், நீர் விநியோகம் எப்போது சீராகும் என்பதை தற்போதைக்கு அறுதியிட்டு கூற முடியாது என்றும் தெரிவித்தார்.