கோத்தா பாரு, அக் 5- வரும் 2020/2021 ஆம் ஆண்டு கல்வி தவணையில் சேர்வதற்காக சபா மற்றும் இதர கோவிட்-19 சிவப்பு மண்டலங்களில் இருந்து முன்கூட்டியே வந்த மாணவர்களை மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தவுள்ளது. இந்நோக்கத்திற்காக கட்டிடம் ஒன்று பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டத்தோ டாக்டர் நோர் அஜிஸி இஸ்மாயில் கூறினார். அந்நோய் பிற மாணவர்கள் மத்தியில் பரவாமலிருப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இரு வாரங்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று அவர் சொன்னார். இதர பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்படும். பதிவுக்கு பின்னர் அவர்கள் தங்கள் வீட்டுக்கு திரும்பி செல்லலாம் அல்லது நிர்ணயிக் கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி பல்கலைக்கழக தங்கும் விடுதியிலேயே தங்கலாம் என்றார் அவர். கல்வியமைச்சின் அறிவுரை படி இணையம் வாயிலாகவும் டுரைவ் ட்ரு எனப்படும் வாகன முகப்பிடம் மூலமாகவும் பதிவு செய்ய மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.