ஷா ஆலம், அக் 7- கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 77 ஆக பதிவானதைத் தொடர்ந்து கிள்ளான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக நேற்று அறிவிக்கப்பட்டது. சிலாங்கூரில் தற்போது தீவிரமாக காணப்படும் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 232 ஆகும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழு கூறியது. இந்த நோய் பரவல் விவகாரத்தை சாதாரணமாக கருத வேண்டாம். அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். நிலைக்கு மோசமடைந்தால் நாம் இன்னும் சிரமத்திற்கு ஆளாக வேண்டி வரும். அடிக்கடி கை கழுவுதல், கூடல் இடைவெளியை கடைப்பிடித்தல், சுவாசக் கவசம் அணிதல் போன்ற நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று அந்த பணிக் குழு கேட்டுக் கொண்டது. நேற்று புதிதாக 20 கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் அதிக நோய்த் தொற்று கொண்ட மாவட்டமாக அறிவிக்கப் பட்டது. அவற்றில் 17 சம்பவங்கள் கிள்ளானிலும் 3 சம்பவங்கள் காப்பாரிலும் பதிவாகின என்று சிலாங்கூர் சுகாதார இலாகா கூறியது. கிள்ளான் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 12 சம்பவங்களுடன் பெட்டாலிங் மாவட்டம் உள்ளது. உலு லங்காட், கோம்பாக் மாவட்டங்களில் தலா இரு சம்பவங்களும் சிப்பாங், உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சம்பவமும் பதிவாகின.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/PSX_20201004_134805-960x640.jpg)