NATIONAL

பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க அடுத்த வாரம் பேரரசரை சந்திக்கிறார் அன்வார்

ஷா ஆலம், அக் 8- புதிய அரசாங்கம் அமைக்க தமக்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதை நிரூபிக்க எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேரரசரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.

பேரரசருடனான அந்த சந்திப்பின் போது முன்பு கூறியதைப் போல் எனக்கு வலுவான மற்றும் நம்பிக்கையூட்டும் வகையிலான ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கிடைத்துள்ளதை தெளிவாக எடுத்துரைப்பேன் என்று அன்வார் கூறினார்.

இம்மாதம் 13ஆம் தேதி  தம்மை சந்திப்பதற்கு பேரரசர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த மாதம் 23ஆம் தேதியன்று திடீர் செய்தியாளர் கூட்டத்தை நடத்திய அன்வார், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வலுவான மற்றும் நம்பிக்கையூட்டும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறியதோடு நடப்பு அரசாங்கம் கவிழ்ந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். வீட்டிலிருந்து அல்லது வேலையிடங்களிலிருந்து இறைவனை பிரார்த்திக்கும் அதேவேளையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.


Pengarang :