பெட்டாலிங் ஜெயா, அக் 11- இங்குள்ள டாமன்சாரா பெஸ்தாரி அடுக்குமாடி குடியிருப்பில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்வதற்கு உண்டாகும் செலவை ஏற்க புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் முன்வந்துள்ளார். சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலையிடத்தில் இந்நோய் பரவியது மற்றும் அவர்கள் தனியாக தங்கியிருப்பது ஆகிய காரணங்களால் அந்த குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு கூறியிருந்தது. எனினும், நெருக்கமான சூழலில் வசிக்கும் அப்பகுதி மக்கள் மத்தியில் அமைச்சின் இம்முடிவு கவலையை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் அவர்களுக்கு மருத்துவ சோதனைகளை தமது தொகுதி சார்பில் மேற்கொள்ள முடிவெடுத்தார். சம்பந்தப்பட்ட மக்களுக்கு தனியார் மருத்துவ ஆய்வகத்தின் உதவியுடன் கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள முடிவெடுத்தோம். இதற்கான செலவை புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஏற்றுக் கொள்ளும் என்று ராஜிவ் கூறினார். கடந்த 7 ஆம் தேதி அப்பகுதி மக்களிடமிருந்து 116 சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட வேளையில் 8 ஆம் தேதி வந்த அதன் முடிவுகள் அனைத்தும் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி படுத்தியதாக அவர் மேலும் சொன்னார்.