கிள்ளான், அக் 11- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட கிள்ளான் நகரம் வழக்கம் போல் செயல்படுகிறது. வர்த்தகர்களும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
தாமான் ஸ்ரீ அண்டாலாஸ், பண்டார் புக்கிட் திங்கி, கிள்ளான், தாமான் பாயு பெர்டானா ஆகிய பகுதிகளில் பெர்னாமா செய்தி நிறுவனம் ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில் சில இடங்களில் சற்று தொய்வு காணப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டதோடு நிர்ணயிக்கப்பட்ட வியாபார நேரத்தையும் கடைபிடிப்பதை காண முடிந்தது.
எனினும், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டன. வாடிக்கையாளர்கள் கடைகளில் அமர்ந்து உணவருந்துவதற்கு அனுமதி இல்லை என்பதே இதற்கான காரணம் எனப்படுகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டாலும் அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளை தாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருவதாக இங்குள்ள வியாபாரிகள் கூறினர்.
கோவிட் பெருந்தொற்று பரவல் காரணத்தால் கிள்ளான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நோயை கட்டுப்படுத்தும் விதமாக இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை .இங்குள்ள 36 வீடமைப்புப் பகுதிகளில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.