ஷா ஆலம், 20 அக்-அதிகமான கிராமப்புற மாணவர்கள் இணையத்தின் வழி கல்வி பயில வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாநில அரசும் அவ்விடங்களுக்கான இணையதள மேம்பாட்டுக்கு இந்தப் பட்ஜெட்டில் அதிகம் செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் இஸ்லாமிய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மொகமட் கையுருடின் சஹாரி கேட்டுக்கொண்டார்.
சரியான தொலைத்தொடர்பு இன்மையால் பல மாணவர்கள் இணைய வழி கற்றலைக் கைவிட வேண்டி உள்ளது அல்லது கற்றல் தடைபட காரணமாகி வருகிறது. இது மாநில மக்களைக் கற்றறிந்தவர்களாக்கும் அரசின் நோக்கங்களுக்குப் பங்கம் விளைவிக்க வல்லது என்றார் அவர்.
அதனால், கிராமப்புறங்களில் அதிகமான இளைஞர்கள் இணைய வழி கல்வி கற்க வசதியாக இணைய வசதிகளை கொண்ட மக்கள் மற்றும் இளைஞர் கல்வி கற்க களஞ்சியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், ஜய்ஸ் என்னும் சிலாங்கூர் இஸ்லாமிய மேம்பாட்டு வாரியத்தின் ஆசிரியர்களின் தகுதியை டிப்ளோமா வரையாவது உயர்த்த வேண்டும் இது மாநில அளவில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் உதவும் என்றார் அவர்.
எதிர் வரும் அக்டோபர் 30ந் தேதி மாலை 3 மணிக்கு மாநில மந்திரி புசார் அவர்களால் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட்டுக்கு மக்கள் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை இணைய வழி சமர்ப்பிக்க வேண்டி மந்திரி புசார் அழைப்பு விட்டிருந்ததை மக்கள் அறிவர்.