ஷா ஆலம், அக் 20- சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மாநகராக அந்தஸ்து பெற்றுள்ளது. இதற்கான பிரகடனத்தை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று வெளியிட்டார்.
இன்று முதல் இந்த நகராண்மைக் கழகம் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் என்று அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். “சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஆகிய நான் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முதல் மாநகராக பிரகடனம் செய்வதோடு இனி சுபாங் ஜெயா மாநகர் மன்றம் என அழைக்கப்படும் என்றும் அறிவிக்கிறேன்” என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
மாநகர் மன்றத் தலைவர் இனி டத்தோ பண்டார் என்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மாநகர் மன்ற உறுப்பினர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள் எனவும் சுல்தான் அறிவித்தார்.
இதனிடையே, சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மாநகர் அந்தஸ்து பெற்றதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த சேவையின் வாயிலாக சுபாங் ஜெயா மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஆக்ககரமான வளர்ச்சியை பதிவு செய்ய முடியும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.
சுல்தான் அவர்களின் அங்கீகாரத்துடன் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டாராக நோராய்னி ரோஸ்லான் நியமனம் செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.