குவாந்தான், அக் 24- பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை சந்திப்பதற்காக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் இங்குள்ள இஸ்தானா அப்துல் அஜிஸ் வந்தடைந்தார்.
பிரதமர் பயணம் செய்த கார் மெய்க்காப்பாளர்கள் மற்றும் பகாங் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் புடை சூழ இன்று மாலை 4.40 மணியளவில் அரண்மனை வளாகத்தில் நுழைந்ததைக் காண முடிந்தது.
ஆயுதப் படைத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்பாண்டி புவாங் பயணம் செய்த காரும் அரண்மனைக்குச் சென்றது.
பிரதமர் இன்று மாமன்னரை சந்திக்கவிருக்கிறார் என்ற தகவல் கசிந்ததைத் தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் செய்தியாளர்கள் பிரதமரின் வருகைக்காக அரண்மனை வாயிலில் கூடத் தொடங்கினர்.
முன்னதாக, பிரதமர் புத்ரா ஜெயாவிலுள்ள பெர்டானா புத்ராவில் சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/118460103_208078184076053_2846354866729253453_o-1-960x640.jpg)