SELANGOR

சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் 1200 பேரிடம் கோவிட்-19 சோதனை

ஷா ஆலம், 25- இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு குறைந்தது 1,200 பேரிடம் கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்படும்.

மாநில சட்டமன்றக் கூட்டம் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுய் லிம் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் ஆகியோரிடம் இச்சோதனை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது மற்றும் மாநிலத்தில் புதிய தொற்று மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டது ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட் தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே அக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். இந்த கோவிட் சோதனை நாளை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :