கோலாலம்பூர், அக் 25- நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் அந்நியர்களை விரட்டியடிக்கும் அணுகுமுறை ஒப்ஸ் பெந்தேங் நடவடிக்கையில் இனி கடைபிடிக்கப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மால் சப்ரி யாக்கோப் கூறினார்.
இதற்கு முன்னர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவோர் ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
நாட்டில் குறிப்பாக சபாவின் கிழக்கு கரைப் பகுதியில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு தடுப்புக் காவல் கைதிகள் மத்தியில் நோய்ப் பரவல் அதிகரித்ததே காரணம் என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சபாவின் கிழக்குக் கரை பகுதிகளில் நோய்த் தொற்று அதிகரித்ததற்கு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களை உள்நாட்டிலுள்ள தடுப்புக் காவல் கைதிகளுடன் ஒன்றாக தடுத்து வைத்ததே காரணம் என்பது கண்டறியப்பட்டது. இதனால் நோய் அனைவருக்கும் பரவி விட்டது என்று அவர் சொன்னார்.
இதன் காரணமாக ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையில் மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளோம். இதன் வழி நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னதாவே அவர்களை நாம் விரட்டியடித்து விடுவோம். எல்லைக்குள் நுழைந்தவர்கள் மற்றும் சாலைத் தடுப்புகளில் பிடிபடுவோர் மட்டுமே கைது செய்யப்படுவார்கள் என்றார் அவர்.
ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையின் வாயிலாக 27 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு எட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.