ஷா ஆலம், அக் 29- எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை பின்பற்றத் தவறிய காரணத்திற்காக சிப்பாங்கில் மூன்று இரவுச் சந்தைகளை (பாசார் மாலாம்) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கோத்தா வாரிசான், டெங்கில் ஜெயா மற்றும் டேசா பிங்கிரான் புத்ரா ஆகிய இடங்களில் செயல்பட்ட அந்த மூன்று சந்தைகளும் மூட உத்தரவிடப்பட்டதாக சிப்பாங் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ரேலா உறுப்பினர்களை நியமிக்காததே அந்த இரவுச் சந்தைகள் மூடப்பட்டதற்கான காரணமாகும் என்றார் அவர்.
சீரான நிர்வாக நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக தமது தரப்பினர் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வர் எனக் கூறிய அவர், இவ்விவகாரத்தில் வியாபாரிகளும் சுய கட்டொழுங்கை கடை பிடித்து வர வேண்டும் என்றார்.
இம்மாதம் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பதினைந்து காலை மற்றும் இரவுச் சந்தைகள் மீது சிப்பாங் நகராண்மைக்கழகம் சோதனை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.