ஷா ஆலம், அக் 31- இணையம் வழி கல்வி கற்பதற்கு வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில் டியூஷன் ராக்யாட் சிலாங்கூர் திட்டத்தை தொடர சிலாங்கூர் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நோக்கத்திற்காக ஒரு கோடியே முப்பது லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
மாணவர்கள் ஆக்ககரமான பயனைப் பெறுவதற்கு ஏதுவாக இணையம் வாயிலான கல்வியும் ஆசிரியர்களின் பயிற்றுவிப்பும் இந்த டியூஷன் ராக்யாட் திட்டத்தில் சேர்க்கப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இது தவிர மனித மூலதன மேம்பாட்டிற்கு சிலாங்கூர் அரசு 24.1 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.