ஷா ஆலம், நவ 1- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்களின் (கே.கே.ஐ.) எண்ணிக்கையை 62 ஆக உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது 48 ஆக இருக்கும் சமூகத் தலைவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்த்தப்படும் அதே வேளையில் அவர்களுக்கு சிறப்பு அலவன்சும் திட்டங்களை மேற்கொள்வதற்கு மானியமும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கேட்டறிவதிலும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும் மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கிடையே இரு வழி உறவு தேவைப்படுவதாக மந்திரி புசார் சொன்னார்.
அதன் அடிப்படையில் இந்திய சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இரு வழி உறவு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய சமூகத் தலைவர்களின் எண்ணிக்கைய உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது என்றார் அவர்.