கிள்ளான், நவ 18- கிள்ளான் வட்டாரத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 189 ஆக பதிவானது. இதில் 132 பேர் தெராத்தாய் தொற்று மையத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இம்மாவட்டத்தில் நேற்று முன்தினத்தை விட 151 சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக சிலாங்கூர் மாநில நடவடிக்கை அறை வெளியிட்ட அறிக்கை கூறியது.
காப்பார் வட்டாரத்தில் 145 சம்பவங்களும் கிள்ளான் வட்டாரத்தில் 44 சம்பவங்களும் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
கோல லங்காட்டில் 33 சம்பவங்களும் பெட்டாலிங்கில் 24 சம்பவங்களும் உலு லங்காட்டில் ஐந்து சம்பவங்களும் சிப்பாங்கில் மூன்று சம்பவங்களும் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்டன.
நேற்று 88 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணச் சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.