ஷா ஆலம், நவ 22- இந்திய வெங்காயத்தின் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தால் பெரிய வெங்காயத்தின் விலையேற்றத்தைத் தவிர்க்க இயலாது என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார துணையமைச்சர் டத்தோ ரோசோல் வாகிட் கூறினார்.
அந்நாட்டில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் மழைகாலம் காரணமாக அந்த உணவுப் பொருளின் இறக்குமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்திய வெங்காயத்திற்கு மாற்றாக தாய்லாந்து, பாகிஸ்தான், ஹாலந்து, மியன்மார், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை பொதுமக்கள் தற்போதைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
இந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் வழக்கமான விலையில் விற்கப்படுவதோடு போதுமான அளவு கையிருப்பும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை விட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தையே பயனீட்டாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். தனித்துவமான சுவையை அந்த வகை வெங்காயங்கள் கொண்டிருப்பதே இதற்கு காரணம் என்றார் அவர்.
உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்வதற்காக இதர நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியத்தை அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.