ஷா ஆலம், நவ 23- கம்போங் பாண்டான் பகுதியில் ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு பொதுப்பணித்துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடும் மழையின் காரணமாக பெருக்கெடுக்கும் நீரை வெளியேற்றும் அளவுக்கு அங்குள்ள கால்வாய்கள் போதுமான கொள்ளலவைக் கொண்டிருக்கவில்லை என்பது தொடக்க கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பொது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர இஸாம் ஹஷிம் கூறினார்.
உலு லங்காட் மாவட்ட பொதுப்பணித்துறை பொறியியலாளர் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக பிரதிநிதி ஆகியோருடன் தாம் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றை அமலாக்குவதற்கான வழி முறைகள் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 15ஆம் தேதி பெய்த கனத்த மழையின் காரணமாக கம்போங் பாண்டான் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.