ஷா ஆலம், ஜன 6- பெர்சியாரான் பூச்சோங் பெர்மாய், ஜாலான் தக்வா பகுதியில் வியாபாரம் செய்து வந்த வணிகர்களுக்கு இடத்தை காலி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் முறையாகவும் கடந்தாண்டு மே மாதம் 13ஆம் தேதி இரண்டாவது முறையாகவும் இடத்தை காலி செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே அந்த வணிகப் பகுதியை உடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் வர்த்த பிரிவு துணை இயக்குநர் அஸ்ஃபரிசால் அப்துல் ரஷிட் கூறினார்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை காலக்கெடு வழங்கும்படி சம்பந்தப்பட்ட வணிகர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கடைகளை உடைக்கும் பணி நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இடமாற்றம் தொடர்பில் தங்கள் தரப்பு மூன்று முறை சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் பேச்சு நடத்தியதாகவும் அவர் சொன்னார்.
அந்த வணிகர்களுக்கு போதுமான அளவு கால அவகாசம் வழங்கப்பட்டதையும் அவர்களுக்கான மாற்றும் இடம் தயார் நிலையில் உள்ளதையும் கருத்தில் கொள்ளப்பட்ட பின்னரே கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அந்த வணிகப் பகுதியை உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
அரசாங்கம் ரிசர்வ் நிலத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட காரணத்தால் அந்த கட்டுமானங்களை உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், கடந்த மாதம் 28ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 36 கடைகளில் 5 கடைகள் உடைக்கப்பட்டன என்றார்.