ஷா ஆலம், ஜன 18- கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை 800 கோடி வெள்ளி மதிப்பிலான உற்பத்தி துறை சார்ந்த முதலீடுகளை சிலாங்கூர் மாநிலம் ஈர்த்துள்ளதாக முதலீடு, தொழில்துறை, வர்த்தகம், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
எனினும், சேவைத் துறையில் பதிவு செய்யப்பட்ட முதலீடு தொடர்பான தரவுகளை தாங்கள் இன்றும் பெறவில்லை என்று அவர் சொன்னார்.
அதேசமயம், கடந்த 2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த முதலீடு தொடர்பான தகவல்களுக்கும் தாங்கள் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
முதலீட்டுத் துறையை பொறுத்தவரையில் கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டில் கடுமையான சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார்.
கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்தாண்டில் நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கினோம். பொது முடக்கத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரே முதலீட்டுப் பயணத்திற்குப் பிறகு வேறு எந்த பயணத்தையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.
இ-பசார் 11.11 மாபெரும் விற்பனை விழாவை முன்னிட்டு இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.