கோலாலம்பூர், ஜன 19- வரும் 2022 முதலாவது காலாண்டிற்குள் 2 கோடியே 70 லட்சம் மலேசியர்கள் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றிருப்பர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார். இந்த தடுப்பூசியின் முதல் கட்டத் தருவிப்பு வரும் பிப்ரவரி மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், தடுப்பூசி செலுத்தும் இயக்கம் கட்டங் கட்டமாக 12 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றார். நாட்டில் தடுப்பூசி இயக்கம் திட்டமிட்டபடி சீராக நடைபெறுவதாகவும் இதன் தொடர்பில் தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் மூன்று ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 தடுப்பூசியை கொள்முதல் செய்யும் பணியை மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்ட போதிலும் இவ்விவகாரத்தில் வெளிப்படையான போக்கு கடைப்பிடிக்கப் படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்பதோடு தேசிய தடுப்பூசி இயக்கத்திற்கு அதிமுக்கியத்துவம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நோக்கத்திற்காக மட்டும் 300 கோடி வெள்ளி விஷேசமாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெறுவது தொடர்பான வழிகாட்டி விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/05/PM-Muhyiddin-Facebook.jpg)