ஷா ஆலம், ஜன 24- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் காலத்தில் பொழுது போக்கு அம்சங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
அந்த அனுமதியை முறையாகப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதோடு மற்றவர்களுக்கு தொல்லை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.
நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
சுங்கை பூலோ, தாமான் ஹில்பார்க்- ஸ்ரீ பெரிஸ்தானாவில் கும்பலாக சைக்கிளோட்டும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டதை சித்தரிக்கும் காணொளி வெளிவந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
மெது நடை மற்றும் சைக்கிளோட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்நடவடிக்கைகளை தனியாவும் ஒரு மீட்டர் இடைவெளியிலும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.