புத்ரா ஜெயா, பிப் 6- இவ்வாண்டு சீனப்புத்தாண்டை முன்னிட்டு விழாக்கால அதிகப்பட்ச விலை திட்டத்தின் கீழ் 16 வகை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்திட்டம் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
கோழி, கோழி முட்டை, காய்கறிகள், கடல் உணவு வகைகள், பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் இந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருள் பட்டியிலில் இடம் பெற்றிருக்கும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இம்மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிப் பொருள்கள் விலையேற்றம் காண்பதை தடுக்கும் நோக்கில் இந்த விழாக்கால அதிகபட்ச விலை திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை காரணம் காட்டி பொருள்களின் விலை உயர்த்தப்படுவதை தடுப்பதிலும் இத்திட்டம் மறைமுகமாக உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்குறிப்பட்ட உணவுப் பொருள்கள் தவிர்த்து இறக்கமதி செய்யப்பட்ட முட்டைக்கோசு, சிவப்பு மிளகாய், பூண்டு, வெள்ளை இறால், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவையும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இவ்வாண்டு சீனப்புத்தாண்டு சீரான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி மிதமான அளவில் கொண்டாடப்பட்டாலும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கான தேவை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.