ஷா ஆலம், பிப் 6– பந்திங், கம்போங் கஞ்சோங் டாராட்டில் வசித்து வரும் ஏழை முதியவரின் பழுதடைந்த வீட்டை பழுதுபார்க்க மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பஹாருடின் முன்வந்துள்ளார்.
கடந்த மாதம் 31ஆம் தேதியன்று அப்பகுதியில் கோவிட்-19 உதவிப் பொருள்களை விநியோகம் செய்த போது சஃபுவான் தனுட் (வயது 76) என்ற அந்த முதியவரின் அவல நிலை தமக்கு தெரிய வந்ததாக ஹஸ்னுள் கூறினார்.
மக்கிய நிலையில் உள்ள பலகைகள் மற்றும் சட்டங்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்த வீட்டை காண நேர்ந்தது. அந்த வீட்டின் அவல நிலை எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. இவ்வளவு மோசமான சூழலில் வசிக்கக்கூடிய கட்டாயத்தில் மக்கள் இன்னும் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார் அவர்.
கூடிய விரைவில் அந்த வீட்டை புனரமைப்பு செய்து தருவதாக அந்த முதியவரிடம் நாங்கள் வாக்குறுதியளித்தோம். இதைக் கேட்டதும் ஆனந்தப் பெருக்கில் அவரது கண்கள் பனித்தன என்று ஹஸ்னுள் மேலும் சொன்னார்.
கிராமத்தில் செய்யும் சிறு சிறு வேலைகள் மூலம் கிடைக்கும் 300 வெள்ளி மாத வருமானத்தில் அந்த முதியவர் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.