ஷா ஆலம், பிப்-9- வரும் மார்ச் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள Selangor Xtiv Virtual e-Sport எனும் மின்னியல் விளையாட்டு போட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்து லட்சம் இளைஞர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் வரை பத்து கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றியாளர்களுக்கு 250,000 வெள்ளி வரை பரிசுத் தொகை காத்திருப்பதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார். இயங்கலை வாயிலாக நடைபெறும் அந்த போட்டி Mobile Legends, PlayerUnkown's Battlegrounds (PuBg), Call of Duty, Pro Evolution Soccer (PES21) ,FIFA21 ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார். இம்முறை நடைபெறும் போட்டி திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில் மின்னியல் விளையாட்டு மீதான அறிவாற்றலை வளர்க்கவும் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இயங்கலை வாயிலாக நிகழ்ச்சிகளை வர்ணனை செய்யும் ஆற்றலை வளர்ப்பதும் அந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.