ஷா ஆலம், பிப் 14- அனிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில தனித்துவமிக்க பிள்ளைகள் சிறப்பு உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வரவேற்கப்படுகின்றன.
பதினெட்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட மாற்றுத் திறனாளி பிள்ளைகள் இந்த உதவித் திட்டத்தின் வாயிலாக பயன் பெற முடியும் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் கூறியது.
இந்த உதவித் திட்டம் உணவு, கூடுதல் அத்தியாவசியத் தேவைகள், உபகரணங்களை வாங்குவது மற்றும் பழுதுபார்ப்பது, சிறப்பு கல்வித் திட்டம் ஆகிய நான்கு நோக்கங்களை உள்ளடக்கியுள்ளதாக எம்.பி.ஐ. வெளியிட்ட அறிக்கை கூறியது.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு முறை மட்டுமே ஐயாயிரம் வெள்ளி வரையிலான உதவி வழங்கப்படும். இந்த உதவி மருத்துவரின் வழிகாட்டலின் பேரில் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்களுடன் www.anis.yawas.my என்ற அகப்பக்கம் வாயிலாக மனுச் செய்யலாம்.
தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அதே அக்கப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவித் தொகை பின்னர் அனுப்பப்படும்.