ஷா ஆலம், மார்ச் 4- சிலாங்கூர் மாநிலத்தில் கெஅடிலான் ராக்காட் மற்றும் பார்ட்டி அமானா ராக்யாட் கட்சிகளுக்கிடையிலான உறவு வலுவாக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்விரு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கட்சித் தாவல் சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்த போதிலும் சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை அவ்விரு கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது என்று மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.
பக்கத்தான் கூட்டணி வலுவாக இருப்பதற்கும் மாநிலத்தை திறம்பட நிர்வகிப்பதற்கும் அக்கூட்டணியின் போராட்ட உணர்வும் மறுமலர்ச்சி சித்தாந்தமும் முக்கிய அடித்தளமாக விளங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கட்சியிலும் பக்கத்தான் கூட்டணியிலும் அவ்வப்போது பிணக்குகள் ஏற்படுவது இயல்பு. எனக்கு தெரிந்தவரை கடந்த 2008ஆம் ஆண்டில் நாங்கள் ஏறக்குறைய பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. எனினும் நாங்கள் மறுபடியும் ஒன்றுபட்டு மக்களிடமிருந்து அதிகாரத்தையும் பெற்றோம் என்றார் அவர்.
கட்சிகளுக்கிடையிலான உறவை சிலாங்கூர் மாநில பக்கத்தான் எப்போதும் கட்டிக்காக்கும் என்பதோடு அரசியல் சூழ்ச்சி வலையில் எப்போதும் சிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமானா சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அக்கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கெஅடிலான் கட்சியில் இணைந்தனர்.
ஜோகூரை சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து சிலாங்கூரிலுள்ள இரு அமானா உறுப்பினர்களும் கெஅடிலான் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனிடையே, இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த அமானா கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் காலிட் சமாட், அந்த உறுப்பினர்கள் பெரிக்கத்தான் கூட்டணியில் சேராமல் கெஅடிலான் கட்சியில் சேர்வதால் இதனை தாங்கள் கடுமையான விவகாரமாக கருதவில்லை எனக் கூறினார்.