ஷா ஆலம், மார்ச் 26– ‘சேய்‘ எனப்படும் சிலாங்கூர் இளைஞர் சமூக அமைப்பின் ‘சேய் லீட்‘ திட்டத்தின் மூலம் 200 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
அந்த தொழில்முனைவோரில் 50 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர் என்று அந்த அமைப்பின் தலைமை செயல்முறை அதிகாரி நுருள் அஸ்வா ரோட்சி கூறினார்.
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டுதலும் பயிற்சியும் ஆறு மாத காலத்திற்கு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கோஹிஜ்ரா எனப்படும் ஹிஜ்ரா சிலாங்கூர் கூட்டுறவு கழக தலைமையகத்திற்கு சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா நேற்று மேற்கொண்ட பயண நிகழ்வில் கலந்து கொண்ட போது நுருள் அஸ்வா இவ்வாறு கூறினார்.
தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்பு பொருள்களை சந்தைப்படுத்துவதில் உதவும் நோக்கில் சேய் லீட் மற்றும் கோஹிஜ்ரா முதன் முறையாக ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்பு பொருள்களை கோஹிஜ்ரா விற்பனை மையங்களில் நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் சந்தைப்படுத்துவது மற்றும் வர்த்தக கடனுதவி பெறுவது போன்ற விஷயங்களில் இவ்விரு அமைப்புகளின் ஒத்துழைப்பு பெரிதும் துணை புரியும் என்றும் அவர் சொன்னார்.