ஷா ஆலம், ஏப் 8- வரும் 15வது பொதுத் தேர்தலில் அதிகமான இளைஞர்களுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கும்படி கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
வேட்பாளர்களாக தேர்வு பெறுவதற்கு தேவையான ஆற்றல் மற்றும் தகுதிகளை மாநிலத்திலுள்ள பல இளம் தலைவர்கள் கொண்டிருப்பதாக அப்பிரிவின் தலைவர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
இந்நடவடிக்கையின் வாயிலாக அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.
கெஅடிலான் கட்சி எந்த நிலையிலும் இளைஞர்களை குறைத்து மதிப்பிட்டதில்லை. அதற்கு நான் ஒரு உதாரணமாகும். எனக்கு 33 வயதாக இருக்கும் போது 14வது பொதுத் தேர்தலில் கோத்தா அங்கிரிக் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சி எனக்கு தந்தது என்றார் அவர்.
மேலும், மாநில மந்திரி புசார்கூட 40 வயது நிரம்பிய இளைஞர்தான் என்று கெஅடிலான் கட்சியின் முதன்மை தேர்தல் மையம் திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
கெஅடிலான் தலைவர்கள் சிலர் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்ட போதிலும் இளைஞர் பிரிவினர் விரக்தியடையாமல் மனவுறுதியுடன் தொடர்ந்து கட்சியின் நலனுக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.