ஷா ஆலம், ஏப் 19– பி.பி.ஆர். எனப்படும் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிப்போர் குறைபாடுகள் தொடர்பில் புகார் செய்வதை எளிதாக்கும் வகையில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசு அறிமுகப்படுத்தும் நலத் திட்டங்கள் தொடர்பான தகவல்களையும் அக்குடியிருப்பாளர்கள் அறிந்து கொள்ள உதவும் இந்த செயலியை திங்க் சிட்டி நிறுவனமும் சிலாங்கூர் மாநில அரசும் கூட்டாக உருவாக்கியுள்ளன.
நமக்கு நாமே (கே2கே) எனும் பெயரிலான இத்திட்டத்தின் வாயிலாக குடியிருப்பாளர்கள் நிதி மற்றும் பொருளுதவி பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று திங்க் சிட்டியின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ஷாருடின் பாயேஸ் கூறினார்.
பி.பி.ஆர். குடியிருப்பாளர்கள் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த முடியும் எனக் கூறிய அவர், இதன் மூலம் மாநில அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு திட்டங்களை அறிந்து அதன் மூலம் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.
தற்போது கம்போங் பாரு ஐக்கோம் பி.பி.ஆர். குடியிருப்பில் மட்டும் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. இதன் வழி அந்த குடியிருப்பில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை சீரான முறையில் ஒருங்கிணைக்க முடியும் என்றார் அவர்.
ஐக்கோம் பி.பி.ஆர். குடியிருப்பு பகுதிக்கு நேற்று வருகை புரிந்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த கே2கே திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.