புத்ரா ஜெயா, ஏப் 25- சட்டத்தை மீறி பொருள்களின் விலையை உயர்த்தும் வணிகர்கள் மீது 2011ஆம் ஆண்டு விலைக்கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாப தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள்களின் விலை கட்டுப்பாடற்ற முறையில் நிர்ணயிக்கப்படுவதை தமது தரப்பு கடுமையாக கருதுவதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகர அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலையேற்றத்தை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய கட்டுப்பாடற்ற விலையேற்றம் வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு வழி வகுக்கும் என்றார்.
பொருள்களை அதிகப்படியான விலையில் விற்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் விதிகள், சந்தையில் விற்கப்படும் போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டில் 25 வெள்ளி முதல் 27 வெள்ளி வரையில் விற்கப்பட்ட 5 கிலோ சமையல் எண்ணெய் கடந்த ஜனவரி முதல் 28 வெள்ளி முதல் 34 வெள்ளி வரையில் விற்கப்படுவதாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
பொருள்களை அதிக விலைக்கு விற்கும் வணிகர்கள் மீது 2011ஆம் ஆண்டு விலைக்கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபச் தடுப்புச் சட்டத்தின் 14(1) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இக்குற்றத்தை புரியும் அமைப்புகள் அல்லது நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் வெள்ளி வரையிலான அபராதமும் தனிநபர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றார் அவர்.