ஷா ஆலம், ஏப் 29– பல்வேறு கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்காக 18 அரசாங்க, தனியார் மற்றும் அரசு சாரா இயங்கங்களுடன் யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் ஒத்துழைப்பை நல்கவிருக்கிறது.
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கும் இலக்கை அடையும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி எடி அகமது கோட்சாலி கூறினார்.
தாங்கள் ஏற்பாட்டு ஆதரவை வழங்கும் மாணவர்களின் ஆற்றல், அடைவுநிலை, தனித்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த 18 அமைப்புகளுடனான கூட்டுத் திட்டம் முக்கிய பங்கினை ஆற்றும் என்று அவர் சொன்னார்.
இத்திட்டத்தின் உந்து சக்தி என்ற முறையில் நாட்டின் வளர்ச்சிக்கும் சுபிட்சத்திற்கும் தேவையான ஆற்றல்மிகுந்த மனித மூலதனத்தை தயார் செய்வதில் மாநில அரசுக்கு உதவி புரிவோம் என்றார் அவர்.
மாநிலத்தின் கல்வி மேம்பாட்டிற்கு உரிய பங்களிப்பை வழங்குவது தொடர்பில் புதிய ஒத்துழைப்புகளை அடையாளம் காண்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி கல்வித் திட்டங்கள் தொடர்பில் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.