ஷா ஆலம், ஏப் 29– இயங்கலை வாயிலாக நடத்தப்படும் இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் உருவான கைவினைப் பொருள் கண்காட்சி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு ஊக்கமூட்டும் வகையிலான ஆதரவை கிடைத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
கடந்த ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட இந்த கண்காட்சியின் வழி 5,000 வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகை லாபமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த வருமானம் ஊக்கமூட்டும் வகையில் உள்ளது. குடும்பப் பெண்கள் உபரி வருமானம் பெறுவதற்கு இந்த கண்காட்சி சிறந்த தளமாக விளங்கும் என நம்புகிறேன் என்றார் அவர்.
இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் 2021ஆம் ஆண்டிற்கான இல்லத்தரசிகள் கைவினைப் பொருள் கண்காட்சியை முடித்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நோன்பு பெருநாள் நெருங்கி வரும் காரணத்தால் இந்த கண்காட்சியில் பிஸ்கேட் போன்ற பொருள்கள் அதிகளவில் விற்பனையானதாக அவர் சொன்னார்.
www.expohassel.com என்ற அகப்பக்கம் வாயிலாக இக்கண்காட்சியில் கலந்து கொள்வதன் மூலம் புதிய பாணியில் பொருள்களை வாங்குவதற்கான அனுபவத்தை பெறும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.